மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்தார்.
இருவருக்கும் இடையில் பல நிமிடங்கள் மூடிய அறைக்குள் பேச்சு இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளது.
கொழும்பில் இன்று ஆரம்பமான ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்கியதற்கு நன்றி கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment