யாழ்ப்பாணம் இளைஞர் படுகொலை: கைதான 6 பேரின் விளக்கமறியல் டிசம்பர் 15 வரை நீடிப்பு!

25 6930ccccd21a5

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை 24 மணி நேரம் காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர்.

காவல்துறையினரின் தடுப்புக் காவல் விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளைக் காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்து பயணித்த காரொன்றும் ஏழாலை பகுதியில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

தடுப்புக் காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (டிசம்பர் 3) முற்படுத்தப்பட்டனர். அப்போது, மேலதிக நீதிவான் உசைன் அவர்களை டிசம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தேடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version