யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

25 69341a3e0ac8b

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஊடக சந்திப்பொன்றை நடத்தி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும், குறித்த கைதி மீதான காயத்தின் காரணம் குறித்துச் சிறைச்சாலைத் தகவல்களுக்கும் பாதிக்கப்பட்ட தரப்புக்கும் இடையே முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன.

சிறைச்சாலையில் கைதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் எனச் சகோதரி குற்றஞ்சாட்டியிருந்தார்.

குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், அவர் கீழே விழுந்து தலையில் காயப்பட்டதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கைதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படும் போதே உடல் சோர்வுற்று இருந்ததாகவும், இந்நிலையில் கீழே விழுந்ததாகவும் சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு நாள் சிகிச்சைக்குப் பின்னர் மீளச் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், மீண்டும் உடல் இயலாமை ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, ஆணைக்குழுவின் முதல் கட்ட விசாரணையின் போது யாழ்ப்பாணச் சிறைச்சாலை நிர்வாகம் தாக்குதலை மறுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

Exit mobile version