கடந்த கால அரசாங்கத்தின் மின்சார வாகன இறக்குமதி திட்டம் குறித்து வெளியான தகவல்

13 31

கடந்த கால அரசாங்கத்தின் மின்சார வாகன இறக்குமதி திட்டம் குறித்து வெளியான தகவல்

கடந்த அரசாங்க நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய மின்சார வாகன இறக்குமதி திட்டத்தின்கீழ், இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த வசதியை வழங்குவதற்காக, 31 நிறுவனங்கள், தம்மை பதிவு செய்திருந்தபோதும், குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டறிந்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டு பணத்தின் அடிப்படையில், அவர்களுக்கு மின்சார வாகன அனுமதிகளை வழங்குவதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

எனினும் இந்த திட்டத்தின்கீழ் ஒட்டோ கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் 335 அனுமதிகளுக்கும், ஓவர்லேண்ட் ஒட்டோ மொபைல் 305 உரிமதாரர்களுக்கும் வாகனங்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ளன.

அதன்படி, குறித்த இரண்டு நிறுவனங்களும் மொத்த அனுமதிகளில் 64 சதவீதத்தை வழங்கியுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 375 மின்சார வாகனங்கள் மட்டுமே ஜூலை 9 ஆம் திகதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் வாகன உரிமதாரர்களால் 84 வாகனங்கள் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சக கோப்புத் தகவல்களின்படி, இந்த வசதியைப் பயன்படுத்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 164 பேர கடற்படையினர், 150 முகாமையாளர்கள், மற்றும் 96 இயக்குநர்கள், 78 பொறியாளர்கள், 61 அதிகாரிகள் 24 ஆலோசகர்கள், ஒரு சர்வதேச கிரிக்கெட் நடுவர் மற்றும் மூன்று மருத்துவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வாகன இறக்குமதிகளின் போது அடிப்படை விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக கண்றியப்பட்டுள்ளது.

உதாரணமாக, இந்தத் திட்டத்தைப் பெற விரும்பும் ஒவ்வொரு இலங்கை புலம்பெயர்ந்தவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

எனினும் அனுமதியை கொண்டிருக்கும் 1,000 பேரில் 286 பேர் மட்டுமே தம்மை பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version