இந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் இலங்கை
இலங்கையில் இந்தியர்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கான செயற்பாட்டை இலங்கை ஊக்குவிப்பதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ரூபாய்களின் முதலீடுகள், இந்திய நிறுவனங்கள் இலங்கைச் சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழியை எளிதாக்கும் என்று சந்தை தரப்பினரை கோடிட்டு இந்திய செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு இந்தி ரிசர்வ் வங்கி சர்வதேச வர்த்தகத்திற்கான விலைப்பட்டியலுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்த அனுமதித்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, இந்திய நாணயத்தை முறையாக சர்வதேசமயமாக்குவதைத் தவிர, உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை, குறிப்பாக இந்திய ஏற்றுமதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு, இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட நாணயமாக இலங்கை அறிவித்தது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை நாணயத்தில் தீர்க்க உதவியது, அத்துடன் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த வழியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்திய நிறுவனங்கள், இலங்கையில் முதலீடு செய்வதை எளிதாக்குவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது.
தற்போது, இந்திய முதலீட்டாளர்கள் டொலர் போன்ற சர்வதேச நாணயங்கள் மூலம் நாட்டில் முதலீடு செய்கிறார்கள், இது மிகவும் சிக்கலானது என்பதுடன் மாற்ற செலவுகளை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ரூபாயில் முதலீடுகள் இந்திய நிறுவனங்கள் இலங்கை சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழியை எளிதாக்கும் என்று இந்திய தரப்பு தெரிவித்துள்ளது எனினும் இந்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி என்பன இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை இதுவரை வெளியிடவில்லை.