ரணில் எப்படி இலங்கையில் பிறந்தார் என்று கடவுளுக்கே தெரியாது!!

Sivagnanam Sritharan

காட்டில் வாழும் மிருகங்களில் தந்திரமான மிருகமாக நரியை கூறுவதை போன்று, நாட்டில் வாழும் மனிதர்களில் மிகவும் தந்திரம் மிக்கவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என்றும், இவர் எப்படி இலங்கையில் பிறந்தார் என்று கடவுளுக்கே தெரியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அது நடக்காது என்பது ஜனாதிபதியின் கருத்தின்மூலம் அறியமுடிகின்றது. நாடு சர்வாதிகாரத்தை நோக்கி போகின்றது என்பது இப்போது நடக்கும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. காட்டில் வாழும் மிருகங்களில் தந்திரமான மிருகமான நரியை கூறுவதை போன்று, நாட்டில் வாழும் மனிதர்களில் மிகவும் தந்திரம் மிக்கவராக ஜனாதிபதியை கூறுகின்றனர்.

பொருளாதாரம் வீழ்ந்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை கண்டறியாது, அதனை கட்டியெழுப்பும் திட்டங்களை முன்வைக்காது ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதன்மூலம் தீர்வு காண முடியாது. கடவுளுக்கு தெரியாது பிறந்தவர்களை போன்று ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் எப்படி பிறந்தார் என்று கடவுளுக்கே தெரியாமல் இருக்கும். அந்தளவுக்கு அவரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. ஜனநாயகம், நீதி இன்றி மக்களின் வாழ்க்கை அடகு வைக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரங்கள் போன்றே இருக்கின்றது. இதன்மூலம் மக்களுக்கு ஏதேனும் கிடைக்கின்றதா? நாட்டுக்காக உணவு வழங்கும் விவசாயிகள் வீதிகளுக்கு வந்துள்ளனர். அவர்களின் நகைகள் அடகுகளில் இருக்கின்றன.

நாட்டை சீரான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து மக்கள் நாளாந்தம் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மக்கள் கையெந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நாடு மிகவும் மோசமான வறுமைக்குள் நாடு தள்ளப்பட போகின்றது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version