அனர்த்த நிலைமைக்குப் பிறகு வீடுகளுக்கு அருகில் காணப்படும் சகதி மற்றும் கழிவுநீர் உள்ள இடங்களில் செல்லும்போது பாதணிகளை அணிவதன் மூலம் தொற்றுநோய்களிலிருந்து விலகி இருக்க முடியும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டபோதே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
“அனர்த்த நிலைமைக்குப் பிறகு சகதி மற்றும் கழிவு நீர் உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாதணிகளை அணியுங்கள்,” என அவர் வலியுறுத்தினார்.
“நீங்கள் சகதி கலந்த நீருக்குள் செல்ல நேர்ந்தால், எலி காய்ச்சல் (Leptospirosis) தொடர்பாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட அதிக அபாய நிலையில் உள்ளவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வைத்தியர் சமல் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளம் வடிந்த பின்னரும் சுகாதார அபாயங்கள் நிலவுவதால், பொதுமக்கள் தனிநபர் சுகாதாரப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என GMOA வலியுறுத்தியுள்ளது.

