எழுநூறுக்கும் அதிகமான அழுகிய முட்டைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த கம்பளை உணவகமொன்றுக்கு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கம்பளை, மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வந்த நாவலப்பிட்டிய வீதியில் சபாரி அண்ட் பேக்கரி என்ற உணவகத்துக்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தைச் சோதனையிட்ட போது அங்கு அழுகி, புழுக்கள் நெளியும் வகையில் சுமார் 700 முட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தததைக் கண்டறிந்துள்ளனர்.
பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி போன்ற உணவுகளைத் தயாரிப்பதற்கும், அயலில் உள்ள ஏனைய உணவகங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கும் அதனைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கம்பளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு 53 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, உணவகத்துக்கு சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவகத்தின் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையின் பின்னர் மீண்டும் உணவகத்தை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.