முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் தமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது என்றும், திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (நவம்பர் 4) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், தனக்கான சேவை நீடிப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 சந்தர்ப்பங்களில் கடிதம் அனுப்பியதாகவும், அவற்றில் ஒன்றுக்கேனும் பதில் கிடைக்கவில்லை என்றும் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தார்.
அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, நீதிபதியின் சேவைகளைப் பாராட்டிய அதேவேளையில், சேவை நீடிப்பு மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கினார்:
இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்குப் பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படக் கூடும். அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம்.
மாறாக, திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை. இது வழமையான நடைமுறையாகும்.