வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட பொதுமக்களின் காணிகள்! விடுவிப்பது குறித்து நடவடிக்கை

25 678e6c9140fbb

வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட பொதுமக்களின் காணிகள்! விடுவிப்பது குறித்து நடவடிக்கை

வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட பொதுமக்களின் காணிகளினை விடுவிப்பது தொடர்பாக காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்வதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி வாக்குறுதி வழங்கியதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்தாவது, “யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதியில் வனவள திணைக்களத்தினால் எல்லையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு எல்லையிடப்படும் நடவடிக்கையின் போது பொதுமக்களுடைய விவசாய காணிகள் உட்பட பல காணிகள் வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

எல்லையிடப்பட்ட காணிகளை வனவள திணைக்களம் விடுவிக்கப்படாமையால் எதுவித அபிவிருத்தி நடவடிக்கையினையும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட முடியாததுடன், திணைக்களங்களும் அபிவிருத்தி சார் திட்டங்களினை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்களால் எமக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாட்டின் அடிப்படையில் சுற்றாடல் அமைச்சர், வனவள பாதுகாப்பு ஆணையாளர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது வனவள திணைக்களம் தொடர்பாக பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக என்னால் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இதற்கான காத்திரமான நடவடிக்கையினை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version