ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர் யுவதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது.
குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் எங்கே எங்கே உறவுகள் எங்கே?, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, கோட்டா அரசே வீட்டுக்குப் போ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
#SriLankaNews