ராஜபக்சக்களின் ரகசியத் திட்டம் இதுதான்! – இறுதிப்போர் குறித்த அதிரடி காணொளியை வெளியிட்டார் சரத் பொன்சேகா!

image 1200x800 21 1

2009-ஆம் ஆண்டு ஈழப்போரின் இறுதித் தருணங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைக் காப்பாற்றுவதற்கு ராஜபக்ச சகோதரர்கள் ரகசியத் திட்டம் தீட்டியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (18) அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் அடங்கிய காணொளி ஒன்றையும் அவர் இன்று நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கப்படுத்தினார்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் நான் சீனாவில் இருந்த போதிலும், அங்கு நடக்கும் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே இருந்தேன் எனத் தெரிவித்த பொன்சேகா, 2009 மே 17 அன்று கோட்டாபய, பசில் ராஜபக்ச ஆகியோர் எரிக்சொல்ஹெய்ம், ஐ.சி.ஆர்.சி (ICRC) மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் பேசி புலிகள் சரணடைவதற்கான சூழலை உருவாக்கினார்கள் எனக் குறிப்பிட்டார். “புலிகள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால், அவர்களைக் காப்பாற்றி இன்று வடக்கின் முதலமைச்சராக்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததால்தான் இன்று ராஜபக்சக்கள் ‘தேசிய வீரர்கள்’ போல வேஷம் போடுகிறார்கள்” என அவர் கடுமையாகச் சாடினார்.

இன்று அவர் வெளியிட்ட காணொளியைப் பதிவு செய்த ஊடகவியலாளரை அன்றைய காலத்தில் கோட்டாபய ராஜபக்ச கொலை செய்யத் தேடித் திரிந்ததாகவும், உயிருக்கு அஞ்சிய அவர் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றதாகவும் பொன்சேகா தெரிவித்தார். போரை எப்படி நிறுத்துவது என்றே ராஜபக்சக்கள் திட்டம் தீட்டியதாகவும், ஆனால் தன்னிடம் அத்தகைய எந்த எண்ணமும் இருக்கவில்லை என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்திக் கூறினார்.

2026-ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள இந்த ‘இறுதிப்போர் இரகசியங்கள்’ அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ராஜபக்சக்களின் தேசப்பற்று குறித்த பிம்பத்தை உடைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்தக் காணொளி ஆதாரத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

 

Exit mobile version