யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

19 2

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (07) கவனயீர்ப்பொன்றை திருகோணமலை நீதிமன்றத்தின் முன்னால் முன்னெடுத்துள்ளனர்.

புதிய நீதி முறை பின்பற்றாது காவல்துறையினரின் அராஜகத்தை கண்டிக்கிறோம் இவ் அத்துமீறிய கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது ஊடகங்களுக்கு சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் குமாரவடிவேல் குருபரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் நேற்று முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, அவர் வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது.

இந்நிலையில் தேடுதலுக்கான நீதிமன்ற கட்டளை இன்றி குறித்த பெண் சட்டத்தரணியின் வீட்டுக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று தமது சட்டத்தரணிகள் கடமைகளுக்குச் செல்லாது, எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version