சிறீதரன் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து வெளியான தகவல்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைக்கும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் செயற்பட்டதாக எழுந்த சர்ச்சை பொய்யென சிறீதரன் தரப்பு உறுதிபடுத்தியுள்ளது.
அண்மையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளின் பட்டியலில் சிறீதரனின் பெயரும் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் சமூக வலைதளப்பக்கம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன், ரணில் விக்ரமசிங்கவை கடந்த தேர்தலில் வெற்றி பெற வைக்கவே செயற்பட்டார் என கூறும் வகையில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், ”முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தொடர்பில் தமிழ் மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயம். தன்னை ஒரு முன்னாள் போராளி என மார்தட்டும் சிறீதரனின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
ரணிலிடம் மதுபான அனுமதிப்பத்திரம் பெற்று தமிழ் மக்களை ஏமாற்றிய சிறீதரனுக்கு ரணிலை ஜனாதிபதியாக்குவதே இலக்கு” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறீதரன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பொய்யானது என உண்மை சரிபார்ப்பவர்களால் (Fact check) உறுதிசெய்யப்பட்டுள்ளது என சிறீதரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.