அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன முக்கிய கேள்விக்கு பதிலளிக்காது நழுவியதுடன், அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான கேள்விக்கு “கிசுகிசு” என்றார்.
குரங்கு ஏற்றுமதியே வெகுவாக பேசப்படுகின்றது. இறக்குமதி, ஏற்றுமதியில் பொருட்கள், சேவைகள், விலங்குகள் தொடர்பில் ஒரு தரப்பினரால் தீர்மானத்தை எடுக்கமுடியாது. வாழும் மிருகங்களை அனுப்புவதிலும் சிக்கல்கள் உள்ளன – என்றார்.
சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதிச் செய்தல், இரண்டு அரசாங்கங்களால் (சீன-இலங்கை) எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. சீனாவில் உள்ள தனியார் நிறுவனமொன்று, அங்குள்ள 16 மிருகக்காட்சி சாலைகளுக்கு குரங்குகளை கொள்வனவு செய்துக்கொள்வது தொடர்பில், விவசாயத்துறை அமைச்சுக்கு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. அதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர, ஏனைய நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகின்றார்.
இலங்கையை விடவும் சீனவில் அமுலில் இருக்கும் சட்டங்கள் கடுமையானவை என்று தெரிவித்த அமைச்சர் பந்துல, இந்த விவகாரத்தில் பல விடயங்களை ஆராயவேண்டும் என்றார்.
இந்நிலையில், ருஹுனு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தெவிநுவர தெற்கு நகரத்தில் ராடார் அமைப்பை நிறுவுவதற்கு சீனாவுடன் எந்வோர் உடன்பாடும் இல்லையென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த அவர், ‘கிசுகிசு’ செய்தியாகும். எனினும், அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு செய்வாராயின் நாட்டுக்கு அறிவிப்பார் என்றார்.
இந்நிலையில், சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளை காலிமுகத்திடலில் (GalleFace Green) மேற்கொள்வதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அப்படியாயின், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ்- சிங்கள புத்தாண்டு போட்டிகளை எப்படி 22 ஆம் திகதி நடத்த முடியுமென எழுப்பிய கேள்விக்கு, எந்தவொரு பதிலையும் அமைச்சர் பந்துல குணவர்தன அளிக்கவில்லை.
#SriLankaNews

