தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோரும் ஈ.பி.டி.பி!

25 683accc1c6715 1

தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

இவை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.

இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.

அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.

எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அடைவு நகை விவகாரத்தினை தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறுப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அது தடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version