பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை பகுதியில் இன்று (09) நடைபெற்ற அனர்த்த நிவாரண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் மாணவர் தலைமுறை சர்வதேசப் போட்டிகளை வெல்லக்கூடிய வகையில் நவீன கல்வி முறை மாற்றியமைக்கப்படும்.
கிராமப்புறப் பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே மற்றும் மிகச்சிறந்த கருவி கல்வி மட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி மறுசீரமைப்பு குறித்து முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு அடிபணியாமல், மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்தச் செயல்முறை உறுதியாகத் தொடரும் என அவர் வலியுறுத்தினார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி இன்று ஆரம்பமானது:
ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை மற்றும் ரம்பேவ ஆகிய பகுதிகளில் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்ட இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த, அதே இடத்தில் மீண்டும் வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டது.