ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ரணில்

24 6607a035c8dc1

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ரணில்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சம் இன்றியும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் (Easter) பண்டிகையை ஒட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபடுகின்றனர்.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம்.

பல்லின சமூகமாக வாழும் நாடு என்ற வகையில் இலங்கை தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

எனவே, இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்கிக்கொள்ளாமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக எம்மை அர்பணிக்க வேண்டியது அவசிமாகும்.

இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து மறையாது.

அதேநேரம், அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சம் இன்றியும் சட்ட அமுல்படுத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன் இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் அர்ப்பணிக்கும்.

அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் நாளாகட்டும் என பிராத்திக்கிறேன்.

Exit mobile version