25 678e78c614683
இலங்கைசெய்திகள்

தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம்

Share

தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம்

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கத்தின் (குழந்தை) இறுதிக்கிரியை இன்று(20) இடம்பெற்றுள்ளது.

1931ஆம் ஆண்டு ஒக்ரோபர் 15ஆம் திகதி திருநெல்வேலியில் பிறந்த இவர் கடந்த 17.01.2025 அன்று இறையடி சேர்ந்தார்.

இவர் நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் தன் தந்தை வேலை செய்த தென்னை எஸ்ரேட்டில் வளர்ந்தவர். இங்கு அடிநிலை சிங்கள தமிழ் மக்களோடு வாழ்ந்திருக்கிறார்.

ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்று மொழிகளிலும் புலமையுள்ளவர். நூற்றுக்கு மேற்பட்ட சுய ஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பு நாடகங்களையும் தமிழ்நாடக உலகிற்கு தந்த பேராளுமை.

இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக்காரணமாக அமைந்தது.

ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை உருவாக்குவதில் பேராசிரியர் கா.சிவதம்பியுடன் இணைந்து பணியாற்றியவர்.

திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தில் விதானை செல்வரத்தினத்துடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களை நடித்ததிலிருந்து இவரது நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது. யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மகாநாட்டில் இவரது வையத்துள் தெய்வம் என்ற நாடகம் முதல்முதலில் மேடையேறுகிறது. இதன் பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பிக்கிறார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாடக டிப்ளோமா பயிற்சியை தனது 45ஆவது வயதில் பெற்றுக்கொள்கிறார். பின்னர் யாழ்ப்பாணத்தில்நாடக அரங்கக்கல்லூரியை உருவாக்கியவர்.

உலகப்புகழ்பெற்ற நாடகர் தாஸிசியஸ் உடன் இணைந்து ஈழத்து நாடகர்களுக்கு தொடர்பயிற்சியை வழங்கியவர். நாடகம் கல்வியாக வரவேண்டும் அதனைக்கற்றறிந்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.

ஜீ.சி.ஈ உயர்தரத்தில் நாடகத்தை ஒரு பாடமாகக் கொண்டுவர அவரது பங்களிப்பு முக்கியமானது. இதற்காக இலவசமாக நாடகத்தை பல ஆண்டுகள் கற்பித்தவர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளதென்றால் அதற்கு மூலகாரணமானவர்.

குழந்தை ம. சண்முகலிங்கம் மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை ஆரம்பிக்க இவரது பணிமுக்கியமானது.

ஆசிரியர்களுக்கான நாடகக்களப்பயிற்சிகள் பலவற்றை நடத்தி ஆசிரியர்களை நாடகத்துறையில் உருவாக்கியவர். இவருக்கு நீண்ட மாணவர் பரம்பரை உண்டு.

தனது ஆசிரியர் பணி நிறைவடைந்ததும் இவர் நாடகத்துறையில் பல்கலைக்கழகத்தில் கற்ப்பிக்க ஆரம்பித்ததன் வழியாக நீண்ட மாணவர் பரம்பரையைக் கொண்டிருக்கிறார்.

இவரது தனி முயற்சியால் பல இளைஞர்கள் நாடகத்தைக்கற்று தேர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இவரது நாடகங்கள் சமூக அரசியல் நிலைமைகளைப் பேசியிருக்கின்றன.

தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர். இவரது முக்கியமான நாடகங்களாக மண்சுமந்த மேனியர், எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, ஆர்கொலோ சதுரர், கூடிவிளையாடு பாப்பா, பஞ்சவர்ணநரியார் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

இவரது நாடகப்பணியைப் போற்றி கிழக்குப்பல்கலைக்கழகம் இவருக்கு கொளரவ கலாநிதி பட்டடம் வழங்கி கொளரவித்துள்ளது. இவரது இழப்பு ஈழத்து நாடக உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது. தனிமனிதனாக தன்னலம் கருதாது நாடகமும் அரங்கியலும் துறைக்கு அளப்பெரிய பணியை ஆற்றியிருப்பதோடு, பல்கலைக்கழக நாடகத்துறையை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரியவர்.

அன்னார் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்படிருந்த நிலையில்தனது 93 வயதில் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அன்னாரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று(20) அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...