மஹிந்தானந்தவிற்காக களத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

3 1

முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தண்டிக்கப்பட்டமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய நபர்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் மஹிந்தானந்தவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்தி வெளியானதன் பின்னர் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

எனினும் இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் இன்றைய தினம் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி நகரம் தற்பொழுது அடைந்துள்ள அபிவிருத்திக்கு மஹிந்தானந்த மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கியுள்ளதாக பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

பௌத்த மதத்திலும் ஏனைய மதங்களிலும் ஒருவர் பிரச்சினையில் இருக்கும் போது அதனை கொண்டாடுவது ஏற்புடையதல்ல எனவும் எந்த ஒரு மதத்திலும் ஒருவரின் துன்பியல் நிலையை கொண்டாடுவது தவறானது என்றே போதிக்கப்படுகின்றது என பௌத்த பிக்குகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பௌத்த மதத்திற்கும் பிரதேசத்திற்கும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அளப்பரிய சேவைகளை வழங்கியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மஹிந்தானந்தவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது அதனை பட்டாசு கொளுத்தி கொண்டாடியவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு பௌத்தப்பிக்குகளினதும் ஏனைய சாதாரண பொது மக்களினதும் பூரண ஆதரவு காணப்படுகிறது என்பதனை இந்த வேளையில் நினைவூட்டுவதாக பௌத்தப்பிக்குள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version