22 63218c01ab21d
இலங்கைசெய்திகள்

தேசிய சபை தொடர்பில் விவாதம்!

Share

நாடாளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” என்ற பெயரில் அறியப்படும் நாடாளுமன்றக்  குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர்   மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (14) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

செப்டெம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் “தேசிய சபை” தொடர்பான பிரேரணை உள்ளடக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நாடாளுமன்ற  அமர்வு நடைபெறவிருப்பதுடன், 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர ஏனைய தினங்களில் மு.ப 9.30 முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி “அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியம்” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அமைய மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

செப்டெம்பர் 22ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு) மற்றும் சிவில் விமான சேவை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து பி.ப 1.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துவது தொடர்பான விதப்புரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதன் பின்னர் பி.ப 4.30 மணி முதல் பி.ப 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விக்கும், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
செப்டெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணையையும், பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல குறித்த அனுதாபப் பிரேரணையையும் விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் அவசியம் குறித்து படைக்கலசேவிதர் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதற்கமைய முதற்கட்டமாக பாராளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அதற்கான அனுமதியை வழங்குவது குறித்த இணக்கப்பாட்டுக்கு வரவும் முடிந்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...