தேசிய பாற் பண்ணையில் கறவை பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை

tamilni 358

தேசிய பாற் பண்ணையில் கறவை பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை

அக்கரப்பத்தனை, டயகம பகுதியில் உள்ள தேசிய பாற் பண்ணையில் 450 கறவை பசுக்கள் பண்ணையில் இருந்து பண்ணை அதிகாரியால் அவ்வப்போது இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு தேசிய மிருக வளர்ப்பு அரச நிறுவனம் மூலம் நாட்டின் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து பெரும் தொகையான நிதி செலவு செய்து பசுக்கள் இந்த பண்ணைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

அவ்வாறு கொண்டு வரப்பட்ட கறவை பசுக்கள் தற்போது பண்ணையில் இல்லை என அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்ணையில் பணி புரியும் உயர் அதிகாரியினால் இவ்வாறான கறவை பசுக்கள் இறைச்சிக்காக நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், அக்கரப்பத்தனை, பகுதியில் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் அவ்வாறான பசுக்கள் பண்ணையில் இருந்து பார ஊர்தி மூலம் கொண்டு செல்லப்படுகிறது எனவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பாற்பண்ணையில் 53 தொழிலாளர்கள் சேவையில் உள்ளனர்.

தேசிய பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் தேவையான சகல வசதிகளும் கொண்ட பண்ணையாக அக்கரப்பத்தனை, டயகம பண்ணை உள்ளது எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்கள் குற்றச்சாட்டு சம்பந்தமாக பண்ணை அதிகாரி சுஜி பெர்னாந்துவிடம் வினவிய போது,தொழிலாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இதற்கு தொலைபேசி மூலம் பதில் சொல்ல முடியாது என்றும், பண்ணைக்கு வந்தால் இங்கு உள்ள உயர் அதிகாரிகள் தகுந்த முறையில் விளக்கம் தருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version