இலங்கைத் தீவு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற காலம் தொட்டு, தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த பெளத்த, சிங்கள ஆட்சிப் பீடங்கள், சிறுபான்மையினரை – குறிப்பாகத் தமிழரை இந்தத் தீவில் மூன்றாம் தரப்பிரஜைகளாக்கும் வகையில் அரச பயங்கரவாதத்தைக் கொடூரமாகக் கட்டவிழ்த்து விட்டன.
அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான மாற்றுவழி ஏதும் இல்லாத நிலையில் ‘முள்ளை முள்ளால் எடுக்கும்’ மார்க்கமாக – வரலாற்றுப் பிறப்பாக்கமாக ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட அமைப்புகள் தமிழர் மத்தியில் எழுபதுகளின் கடைசியில் தோற்றம் பெற்று, அவை தீவிரமடைந்தன.
அந்தச் சமயத்தில், விரிவாக்கம் கண்டு வந்த தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கூண்டோடு அழிப்பதற்குக் கங்கணம் கட்டிய சிங்கள அரசு, தமிழர் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.
அதன் குரூர வடிவமாக தமிழர்களுக்கு எதிரான பண்பாட்டுப் படுகொலைக் கொடூரமாக அரங்கேறிய யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பின் 41ஆவது ஆண்டு நிறைவில் நாம் இன்று நிற்கின்றோம்.
சிங்கள அரசுகளின் தமிழின ஒழிப்புத் திட்டம் என்பது இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில் – தமது பூர்வீகத் தாயகத்தில் ஒரு தேசமாக, ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக – அவர்கள் நிலைத்துக் காலூன்றி, தழைத்து நிற்பதற்குக் காரணமான ஒவ்வொன்றையும் இலக்கு வைத்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
தமிழ் இனத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்தும் மொழி உரிமை முதலில் பறிக்கப்பட்டது. தொடர்ந்து கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, நிலவுரிமை என்று ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, கடைசியில் வாழ்வியல் உரிமை கூட மோசமாகப் பாதிக்கப்பட்டது. இலட்சக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொன்று போடப்பட்டார்கள் அல்லது நாட்டை விட்டுத் தப்பியோடி, பூமிப் பந்தெங்கிலும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த வரிசையில் தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தை சீருடை தரித்த சிங்களக் காடையர்கள் தீயிட்டுக் கொளுத்தி என்றுமே மன்னிக்க முடியாத படுபாதகச் செயலைப் புரிந்தனர்.
தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷத்தை பெளத்த, சிங்கள காடைத்தனம் கொடூரமாகச் சீரழித்த இந்தக் குரூரச் செயல் உலகத் தமிழ் மக்களின் இதயங்களைக் கொதிப்புற வைத்தது. சிங்களப் பேரினவாதத்தின் காட்டுமிராண்டித்தன முகத்தை உலகின் முன் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது. சர்வதேசமே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றது.
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கான நியாயப்பாட்டையும் அதற்கான சர்வதேசப் புறநிலையையும் தோற்றுவிக்கும் ஆரம்பக் கொடூரமாக இந்தப் பண்பாட்டுப் படுகொலை அடையாளப்படுத்தப்பட்டது.
சிங்களம் அன்று யாழ். பொது நூலகத்தில் இட்ட தீ, நூல்கள் சாம்பலானமையுடன் அடங்கிவிட்டது. ஆனால், அது தமிழ்த் தேசிய ஆன்மாவினுள் கிளறி விட்டிருக்கும் நெருப்பு அடங்கி விடவில்லை.
தமிழ்த் தேசிய விடுதலைக்கான உணர்வெழுச்சியாக அது இன்னும் கனன்று கொண்டே இருக்கின்றது. வெளியே தெரியாமல் கனன்று கொண்டே இருக்கின்றது என்பதுதான் உண்மை.
– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (01.06.2022 – காலைப் பதிப்பு)
Leave a comment