மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி! – அநுர குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka

” 2018 இல் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் அரங்கேறியதுபோல்தான் தற்போதும் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி நடந்துள்ளது. அன்று மஹிந்தவை குறுக்கு வழியில் பிரதமராக்கினார் மைத்திரி. இன்று ரணிலை பின்கதவால் அழைத்துவந்து பிரதமராக்கியுள்ளார் கோத்தா.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களால் நிராகரிக்கப்பட்டரே ரணில் விக்கிரமசிங்க. மக்களால் தற்போது விரட்டப்படுபவரே கோத்தாபய ராஜபக்ச. இவ்விருவரும் இணைந்து நடந்தும் ஆட்சி ஏற்றுக்கொள்ளக்கூடியதா? இது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரான நியமனமாகும். ரணில் கோத்தாவை நம்புகிறார். கோத்தா ரணிலை நம்புகிறார். ஆனால் இவ்விருவரையும் மக்கள் நம்பவில்லை. எனவே, ராஜபக்சக்களுடன் சேர்த்து ரணிலையும் தோற்கடிக்க வேண்டும்.

2018 இல் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்கவை பின்கதவால் அழைத்து வந்து பிரதமர் ஆக்கினார் மைத்திரிபால சிறிசேன. இன்றும் அதற்கு ஒப்பானதொரு செயல்தான் நடந்துள்ளது. தமது முகாமுக்கு எதிராக செயற்பட்டவரை அழைத்து கோத்தா பிரதமராக்கியுள்ளார். இது மக்கள் ஆணையைமீறும் செயலாகும்.

வெள்ளைவேன் கலாசாரத்தை ஆரம்பித்தவர்களுடன் இணைந்து ரணிலால், எப்படி ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்க முடியும்?

எனவே, குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடு இதுதான். ” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version