கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிருஸ்ணகிரி மாவட்ட சிறுவர்கள் நல குழுவிடம் விஜய் மீது வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சியின் நிர்வாகி இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.
அண்மையில் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ – மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இதன்போது, விஜய் மாணவிகளுடன் நடந்து கொண்ட விதத்தை ஏற்கனவே, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார். அத்துடன் அவர்களின் பெற்றோரையும் அவர் கடுமையாக கண்டித்திருந்தார்.
இதற்கு எதிராக ஏற்கனவே வேல்முருகன் மீது முறையிடப்பட்டுள்ள நிலையில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே, கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டத்தரணிகள் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஸ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டுள்ளார்.
இந்த செயல் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை தொடுவது தவறில்லை என்கிற தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.