சமீபத்திய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) தீர்மானித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களம் (IDCPC) இந்த நிதியுதவியை வழங்கவுள்ளது. இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று (30) தனது அதிகாரப்பூர்வ ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உதவி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீனத் தூதரகம், இது இலங்கை மக்கள் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ள “அன்பு மற்றும் அக்கறையை” பறைசாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கு இந்த நிதியுதவி ஒரு முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீன அரசாங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக பல்வேறு கட்ட உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.