முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவைத் தேடி குற்றப் புலனாய்வு பொலிஸார் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்துக்குச் சென்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவுக்கு மனுஷ நாணயக்கார வரவுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் குழு ஒன்று நேற்று(10) பிற்பகல் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நேற்று காலை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு சென்றிருந்தார்.
அதன்போது, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனுஷ நாணயக்கார, தனது சகோதரர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தனது பெயரை விற்று மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேபோன்று, தனக்கு ஆபத்து என்று தெரிந்த நிலையிலும் நாட்டின் நலன் கருதி, தெரிந்தே பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக தனது அமைச்சு அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்ட மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவது குறித்து எதுவித அச்சமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.