மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, பணியாளர்களுக்கான விருப்ப ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்க இலங்கை மின்சார சபை (CEB) திட்டமிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு (PUCSL) சமர்ப்பித்துள்ள முன்மொழிவில், ஜனவரி 26 முதல் மார்ச் மாதம் வரை மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தன்னார்வமாகப் பணியிலிருந்து முன்கூட்டியே வெளியேறத் (VRS) தீர்மானிக்கும் 2,158 பணியாளர்களுக்கு சுமார் 11.554 பில்லியன் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. இதில் தகுதியுள்ள சில பணியாளர்கள் தலா 50 இலட்சம் ரூபாய் வரை நட்டஈடாகப் பெற்றுக்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை ஆறு புதிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான பணிகளை பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு வலுசக்தி அமைச்சு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மின்சார சபையை மறுசீரமைக்கும் ஒரு பகுதியாகவே இந்த ஆட்குறைப்பு மற்றும் சொத்து மாற்றம் இடம்பெற்று வருகின்றது. இருப்பினும், நட்டத்தில் இயங்கும் ஒரு பொது நிறுவனம், மக்கள் மீது மேலதிகக் கட்டணச் சுமையை ஏற்றி ஊழியர்களுக்குப் பாரிய நட்டஈடு வழங்க முற்படுவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.