கார்களின் விலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் இருக்கும் நிதி கையிருப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் கடந்த (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி தாமதம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (25) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகளை ஒப்பிடும் போது கடுமையான உயர்வு பதிவாகியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது.
இதன்படி, டொயோட்டா – பிரீமியர் 2017இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Toyota – Vitz – 2018இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 93 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Toyota – Aqua G 2012இன் முந்தைய விலை 60 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை 68 லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், Honda – Vessel2014இன் முந்தைய விலை 80 லட்சமாக இருந்த நிலையில், அதன் புதிய விலை ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.