களுத்துறை- வலல்லாவிட பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களிப்பதற்காக இலஞ்சம் வழங்கப்பட்டுள்ள சம்பவமொன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைகயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வலல்லாவிட பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின் போது தம்மை ஆதரித்து வாக்களிப்பதற்காக ஒரு தரப்பினரால் உறுப்பினர்களுக்கு தலா பதினைந்து லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு, ஐந்து லட்சம் வரை முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது
எனினும் அவ்வாறு முன்பணம் வாங்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் கொடுத்தவர்களுக்கு எதிர் அணியினருக்கு ஆதரவாக தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக குறித்த தகவலை அறிந்து கொண்ட இலஞ்சம் கொடுத்த தரப்பினர், தங்களை ஏமாற்றிய பெண் உறுப்பினருக்கு வழங்கிய முன்பணத்தை திருப்பித் தருமாறு அச்சுறுத்தல் விடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் நிரோஷன் பாதுக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.