இலங்கையில் இரு புதிய வங்கிகள்
அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்துடன் இலங்கையில் இரு வங்கிகளை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார்.
பொரளையில் நேற்றுமுன் தினம் (26.08.2023) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், முதலீட்டு வங்கி ஒன்றையும் அபிவிருத்தி வங்கி ஒன்றையும் அமைக்க வேண்டும்.
பெரிய, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலன்களுக்கு சேவை செய்யும் இந்த இரண்டு வங்கிகளிலும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் பங்குகளை வைத்திருக்க முடியும்.
மாறிவரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை அமைக்கப்பட வேண்டும். இந்த வங்கிகள் மூலம் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை அபிவிருத்தி வங்கி வழங்க முடியும்.
அதே நேரத்தில் முதலீட்டு வங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இலங்கை தொழில்முனைவோருக்கு உதவ முடியும் என குறிப்பிட்டுள்ளார்.