தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும், செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே ச.அரவித்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய விசேட பொதுச்சபைக் கூட்டம் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் கட்சியினுடைய நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அதற்கு முட்டுக்கட்டையாக செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செயற்பட்டதன் காரணமாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.
2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டு முன்கொண்டு செல்ல வேண்டுமென நாங்கள் எடுத்த முயற்சியை இரண்டு ஆண்டுகளாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டு கொண்டு இன்றுவரை பல இடர்பாடுகளை தோற்றுவித்தார்.
தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்க்கமான முடிவை எடுப்போம் – என்றார்.
#SriLankaNews