சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ். மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையை செலுத்தத் தவறும் பட்சத்தில், 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடத்த அனுமதி வழங்குவதில்லை என யாழ். மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம், மேயர் இம்மானுவல் ஆனோர்ல்ட் தலைமையில், இன்று (16) காலை இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த விவாத்தின் போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகளுக்கான வரி மற்றும் இதர கட்டணமாக சுமார் 39 இலட்சம் ரூபாய் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கண்காட்சியை நடத்துவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, நிலுவையைச் செலுத்தாமல் அனுமதி வழங்குவதில்லை என்றும், மாநகர சபையால் வழங்கப்படும் சுகாதார சேவைகள் உட்பட நலச்சேவைகள் எதையும் வழங்குவதில்லை எனவும் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#srilankanews