கலை உலகின் ஒப்பற்ற மகுடம்: 40-வது கலாபூஷணம் அரச விருது விழா இன்று அலரி மாளிகையில்!

01 12 1

நாட்டின் கலைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, தேசத்தின் அடையாளத்தைச் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் கலைஞர்களைக் கௌரவிக்கும் ‘கலாபூஷணம்’ அரச விருது வழங்கும் விழா இன்று (12) காலை 10:00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்த விழாவை மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்விருது விழா இம்முறை 40-வது ஆண்டாக (40th Anniversary) மிக விமரிசையாக நடைபெறுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையில் நீண்டகாலமாகத் தொண்டாற்றி வரும் மூத்த கலைஞர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

தலைமுறைகளின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் கலைஞர்களுக்குக் கலை உலகின் “மகுடம்” சூட்டும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இதில் நாட்டின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் கலைத் திறன்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த அரச விருது விழா அமைகிறது.

 

 

Exit mobile version