தமிழர் நினைவேந்தலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க காங்கிரஸ்
தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு தாம் ஆதரவளிப்பதாக அமெரிக்க காங்கிரஸ் (US Congress) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சம்மர் லீ (Summer Lee) குறிப்பிடுகையில்,
“2009ஆம் ஆண்டு ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவு கூர்வதில், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் தாம் இணைகின்றோம்” என கூறியுள்ளார்.
மேலும், குறித்த தீர்மானத்துடன் இணங்கியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் (Deborah Ross), தமிழர்களின் இந்த துயரத்தை நினைவுகூரவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் அவர்களுடன் இணைவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அமெரிக்கா ஆதரவு தர வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடத்திய இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க காங்கிரஸில் ஒரு முக்கிய தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் பிரதிநிதி வைலி நிக்கல் (Wiley Nickel) 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தழிர்களுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.