சீனாவுடன் முக்கிய கலந்துரையாடல்
சீன தொலைத்தொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், BYD நிறுவனம் உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துயாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் (19.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதன்போது இலங்கையின் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் துறைமுக நகரத்தை சர்வதேச நிதி மத்தியஸ்தானமாக மாற்றியமைத்தல், துறைமுகநகரத்திற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்குதல், துறைமுக நகரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற மற்றும் வழிக்காட்டல் முறைமைகளை உருவாக்குதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பை மின்சாரத்தின் ஊடாக இயக்குதல், மின் வாகன பாகங்களை ஒழுங்கமைத்தல், மின்சார தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முடிந்த வகையில் உயரிய பங்களிப்பை வழங்குவதாகவும், இலங்கையின் முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் முதலீட்டாளர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.