இலங்கை

கோடிலியா உல்லாச சுற்றுலா பயணிகளை வரவேற்க விசேட ஏற்பாடு

Published

on

கோடிலியா உல்லாச சுற்றுலா பயணிகளை வரவேற்க விசேட ஏற்பாடு

இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசன் துறைமுகத்துக்கு வரும் கோடிலியா உல்லாசப் பயணக் கப்பல் சுற்றுலாவிகளுக்கு வேண்டிய சேவைகளை உரிய முறையில் வழங்க வடக்கு மாகாண ஆளுநரின் விசேட உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜுன் 16ம் திகதி காங்கேசன்துறை துறைமுகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டபோது முதல் தடவையாக வருகை தந்திருந்த கோடிலியா உல்லாசப் பயணக் கப்பல் இந்த மாதம் 11ம் மற்றும் 18ம் திகதிகளிலும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வந்திருந்தது.

எனினும், இந்தக் கப்பலில் வரும் உல்லாசப் பயணிகளை வரவேற்று உபசரிக்க உள்ளூர் மட்டத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினர் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலரையும் நேரில் அழைத்து விசேட கலந்துரையாடலை நடாத்திய ஆளுநர், சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கியிருந்தார்.

யாழ் மாவட்ட உள்ளூர் தனியார் பேரூந்து சங்கத் தலைவர், தெல்லிப்பழை – காங்கேசன்துறைப் பகுதி முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், போக்குவரத்துத் துறை சார்ந்த வேறு பிரதிநிதிகள், உணவு உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலருடனும் இதன்போது விரிவான கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.

சுற்றுலாவிகளுக்கான முச்சக்கரவண்டி, கார், சிறியரக வான், பேரூந்து உள்ளிட்டவற்றின் சேவையை சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிக்கும் வகையில் திறம்பட வழங்குவது குறித்தும் பேசப்பட்டதுடன், சேவை வழங்குநர் அனைவரையும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தில் பதிவுகளை மேற்கொண்டு உரிய ஒழுங்கு முறையில் சேவையை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இதுவரையில் சுற்றுலாவிகள் விசேட பேரூந்து மூலம் துறைமுகத்திலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீட்டுச் சந்தியில் வசதிகள் போதாமிலிருப்பதால், துறைமுகத்துக்கு அருகாமையில் தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் கட்டிடத்தில் சுற்றுலாவிகளை வரவேற்று உபசரிக்க ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து நேரில் சென்று ஆராயப்பட்டது.

இந்தக் கட்டிடமும், அதன் சுற்றுப்புறமும் போதிய இடவசதியுடன் இருக்கின்ற காரணத்தினால் போக்குவரத்து வாகனங்களை உரிய முறையில் ஒழுங்குபடுத்தி, உணவு மற்றும் இதர யாழ்ப்பாண உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கான கூடங்களையும் அதற்குள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 Comment

  1. Pingback: ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version