ஆபத்தின் விளிம்பில் மனித இனம்!

1665581700 ranil 2

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் அந்த விடயத்தில் நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘கோப் 27’ உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே ‘கோப் 27’ மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய நாடுகள் மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கக்கூடிய நாட்டு தலைமைகள் சமூகமளிக்காமையானது, காலநிலை தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் பேரழிவுகளை வரும் முன்னரே தடுப்பதற்காக 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி எனும் இலக்கை அடைவதனை கருத்திற்கொண்டு நாம் முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வருட பணிக்கான ஒப்புதல் முத்திரையாக இது இருக்க வேண்டும் என்பதுடன், ஆற்றல் துறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் ஆரம்பமாக வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநாட்டில் பங்கெடுக்கும் தரப்பினருடன் தொடர்புடைய வகையில், ‘கோப் 28’ இல் நிலைபேண்தகு முன்னேற்றம் காணப்பட வேண்டுமெனவும் , அவ்வாறு இல்லாவிட்டால், ‘கோப்’ அமைப்பை கலைப்பதே சிறந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version