இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போதுமான அரிசி தொகை நாட்டில் இருக்கின்றது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையாக உள்ள அரிசி தொகை வர்த்தக அமைச்சால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் வருடாந்த அரிசி நுகர்வானது 24 இலட்சம் மெற்றித் தொன்னாக உள்ள நிலையில், வருடாந்த அரிசி உற்பத்தியானது 16 இலட்சம் மெற்றித் தொன்னாகக் காணப்படுகின்றது.
இந்த அறுவடையானது 8 மாத காலப்பகுதிக்குப் போதுமானதாகும். எனவே, நான்கு மாத காலப்பகுதிக்கு அரிசி பற்றாக்குறையாகும் நிலைமை உள்ளது.
இம்முறை சிறுபோகத்தில் திட்டமிடப்பட்ட பயிர் நிலத்திற்கு அதிகமான நிலப்பரப்பில் பயிரிடுவதற்கு விவசாயிகள் முன்வந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு சிறுபோகத்தில் 4 இலட்சத்து 43 ஆயிரத்து 362 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது. 2021ஆம் ஆண்டு இந்த நிலப்பரப்பின் அளவானது 4 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயராகக் காணப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டு குறித்த பயிர் நிலத்தின் அளவானது 4 இலட்சத்து 47 ஆயிரம் ஹெக்டேயராக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு முன்னதாக, 2 இலட்சத்து 44 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில், பயிர் நடவடிக்கை நிறைவுசெய்யப்பட்டிருந்தது.
எனினும், மேற்கொண்ட முயற்சியின் பலனாக, தற்போது 4 இலட்சத்து 47 ஆயிரம் ஹெக்டேயரில் பயிரிடும் பணிகள் இடம்பெறுகின்றன.
மக்கள் தற்போது, அரிசியைக் கொள்னவு செய்து களஞ்சியப்படுத்தப் பார்க்கின்றனர்.
தற்போதைய நிலைமையில், இந்த ஆண்டின் இறுதி சில நாட்களின்போதே அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கே அரிசி தேவையாக உள்ளது.
3 இலட்சத்து 39 ஆயிரம் மெற்றிக் டன் அரிசி கடந்த வாரம் கொள்வனவு செய்யப்பட்டது. இந்தத் தொகையை விடவும், இன்னும் சிறிதளவான அரிசியே அவசியமாக உள்ளது. அதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பை முகாமை செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் உள்ள நெல் தொகையை அரிசியாக சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சமடைந்து, பொதுமக்கள் அரிசியைக் கூடுதலாகக் கொள்வனவு செய்து சேமித்து வைக்கவேண்டிய அவசியமில்லை” – என்றார்.
#SriLankaNews