ஓகஸ்டுக்கு முன்பு உணவு நெருக்கடி! – அபாயச் சங்கு ஊதுகிறார் ரணில்

ranil mp 1

விவசாயத்துக்குத் தேவையான உரம் இல்லாமையால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஸ்கை நியூஸ்’ செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை எனவும், இதனால் நெல்சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த நேரத்தில் உலகளாவிய உணவு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் – இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எங்களிடம் டொலரும் இல்லை, ரூபாவும் இல்லை. நாங்கள் தற்போது நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையைத் தாங்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததை முன்னிட்டுத் தாம் வெட்கப்படுகின்றார் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே பொறுப்புக்கூறவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version