அரசியல்

‘மொட்டு’வின் எம்.பிக்கள் இடையே அமைச்சுப் பதவிகளுக்குப் போட்டி!

Published

on

புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் கடும் போட்டி ஆரம்பித்துள்ளது என அரசின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அடிக்கடி சந்தித்தும், பல்வேறு தரப்பினர் ஊடாகவும் தமக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆகக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 23 அமைச்சுக்களுக்கு ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குச் சுமார் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே அந்தக் கட்சியைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

மேலும் ஐந்து அமைச்சுப் பொறுப்புக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைச்சுப் பதவிகளுக்கான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அமைச்சரவையில் தினேஷ் குணவர்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மேலதிகமாக இதர கட்சிகளுக்கு 11 அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இதர அரசியல் அணியில் அங்கம் வகிக்கும் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, விஜயதாஸ ராஜபக்ச, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, நளின் பெர்னாண்டோ, டிரான் அலஸ் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

மீதமுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version