இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை உடன் சமர்ப்பிக்குக! – ரணில் வலியுறுத்து
“இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் சபையில் அரசு முன்வைக்க வேண்டும்.”
-இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழியின் பிரகாரம் அந்த அறிக்கை சபையில் இவ்வாரத்துக்குள் முன்வைக்கப்பட வேண்டும்.
அத்துடன், தரவுகள் மற்றும் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் என்பனவும் அவசியம். அப்போது அது பற்றி விவாதிக்கலாம்.
குறிப்பாக சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் முன்வைத்தால், அந்த மாநாட்டிலும் இது பற்றி கலந்துரையாடலாம்” – என்றார்.
குறித்த மாநாட்டுக்கு முன்னர் அறிக்கை வெளியிடப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இதன்போது உறுதியளித்தார்.
You must be logged in to post a comment Login