பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று (டிசம்10) கைது செய்யப்பட்டதாகப் பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவன் எத்தலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், பண்டாரவளையில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவன் என்றும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணையில், குறித்த மாணவன் பாடசாலையில் நாடகம் மற்றும் நடனக் கலைகளைக் கற்று வருவதுடன், பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளான். பல சந்தர்ப்பங்களில் பரத நாடகங்களில் இளம் பெண்ணாகத் தோன்றியுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
தாயார் அனுப்பிய பணத்தில், ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த பர்தாவை வாங்கியதாக மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பர்தாவை அணிவதற்கு இருந்த ஆசையில், தனது சகோதரி பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற பின்னர், அவரது ஆடைகள், செருப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை நகரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றை அணிந்து நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
குறித்த மாணவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவன் தனது பாட்டியின் வீட்டில் சகோதரியுடன் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

