மின்கட்டணம் செலுத்துதலில் 10 கோடி மோசடி – 24 வயது இளைஞன் கொழும்பில் கைது

Three people arrested 25465

மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபா மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசினோ விளையாட்டுகளுக்கு அதிக அடிமையாக இருந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் போது இராணுவ விசேட அதிரடிப்படையில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரியவந்துள்ளது.

மேலும் கெசினோ கிளப்களுக்கு வருகை தரும் வர்த்தகர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதாக கூறி குறித்த இளைஞன் ஏமாற்றி வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலட்சக்கணக்கான ரூபாய் மின்சாரக் கட்டண பட்டியல் பெற்றவர்கள் குறிப்பிட்ட கைப்பேசி செயலி மூலம் செலுத்தினால் 20% தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என கூறி நபரொருவர் மோசடியில் ஈடுபடுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

சந்தேகநபரான இளைஞன் பணம் பெற்று மின்சார கட்டணத்தை இணையத்தின் ஊடாக செலுத்தியதாக உறுதிப்படுத்துவதற்காக இணையத்தின் ஊடாக மின்சார சபையின் கட்டணங்களை செலுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்துள்ளார்.

மின்சார சபையின் தரவுகளில் கட்டணம் செலுத்தப்பட்டதாக புதுப்பிக்கப்பட்டாலும், அதற்கு பணம் செலுத்தப்படுவதில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையதளங்களை ஹேக் செய்வது எப்படி என்பதை அவரே கற்றுக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தான் ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தில் கெசினோ விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபருடன் தொடர்புடைய மேலும் பல தரகர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

 

Exit mobile version