யாழில் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி!
President S Solution To Land Issue In The North
வடக்கில் நிலவும் காணி பிரச்சினையை மீளாய்வு செய்து மக்களிடம் காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று (31) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அபிவிருத்தி நோக்கங்களுக்காகவோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அரசாங்கம் நாட்டின் எந்த இடத்திலும் நிலங்களைக் கையகப்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக மற்ற காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு திட்டத்திற்காக யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை முழுமையாக விடுவிக்க தயாராக உள்ளது என்றும், அதற்காக பொருத்தமான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர அதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடக்கு மாகாணத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரித்து விரைவான முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
அத்துடன், வடக்கின் மக்கள் ஏராளமான பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் விவசாயம் உள்ளிட்ட வடக்கின் முழு அரச சேவையையும் மேலும் வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.