மூதூர் படுகொலையின் 37வது நினைவஞ்சலி நிகழ்வு!! இன்று அனுஷ்டிப்பு
மூதூர் – பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 37வது நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மணற்சேனை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (16.07.2023) காலை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மூதூர் பிரதேசசபை முன்னாள் உப தவிசாளர் சி.துரைநாயகம், முன்னாள் கிராம உத்தியோகத்தர் தேவகடாட்சம் உட்பட பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 40 ற்கும் மேற்பட்டோர் ஆயுத தாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியும், வெட்டப்பட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இவர்களின் ஆத்மசாந்தி வேண்டி அப்பகுதி மக்களால் இன்று நினைவு நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த படுகொலைச் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். 1986ம் ஆண்டு யூலை மாதம் 16ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் 300க்கு மேற்பட்ட ஆயுததாரிகளால் அகதி முகாமும், அயல் கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இப்பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
குறித்த முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களது 17 பேரின் சடலங்கள் கட்டைபறிச்சான் புளு இராணுவ முகாமில் வைத்து பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment