16 9
இலங்கைசெய்திகள்

மின்கட்டண குறைப்பு தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள எதிர்க்கட்சி எம்.பி

Share

மின்கட்டண குறைப்பு தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள எதிர்க்கட்சி எம்.பி

இலங்கை மின்சாரசபைக்கு (CEB) செலவு குறைவடைந்து பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ள நிலையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று (9) கொழும்பிலுள்ள (Colombo) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நளின் பண்டார மேலும் குறிப்பிடுகையில், ”வருடத்துக்கு இரு திருத்தங்கள் எனக் காணப்பட்ட முறைமை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அரசாங்கத்தால் 4 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஒக்டோபரில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஜனவரியில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த மார்ச் மாதத்தில் 4 சதவீதம் மாத்திரமே மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்று இலங்கை மின்சாரசபை கூறிய போது, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தலையிட்டு 21 சதவீத கட்டண குறைப்பினை பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

ஜூலையிலும் மின்சாரசபை 4 சதவீதம் எனக் கூறிய போதிலும், 22.9 சதவீத கட்டண குறைப்பினை மேற்கொள்வதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தியே இடம்பெறுகிறது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊடாக 17 சதவீத மின் உற்பத்தி இடம்பெறுகிறது. நிலக்கரி உள்ளிட்ட செலவு குறைந்த முறைமை ஊடாக குறிப்பிட்டளவு மின் உற்பத்தி இடம்பெறும் அதேவேளை, 5 சதவீத மின் உற்பத்தி மாத்திரமே எரிபொருட்களால் இடம்பெறுகிறது.

நீர்மின் உற்பத்தியின் போது ஒரு மின் அலகுக்கு 57.85 சதத்துக்கும் 2.50 ரூபாவே செலவாகிறது. ஆனால் எரிபொருள் ஊடான மின் உற்பத்திக்கு அலகொன்றுக்கு 105 ரூபா வரை செலவிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தி என்பதால் மின்சாரசபைக்கு பாரிய தொகை மிஞ்சுகிறது.

ஜே.வி.பி.யினரால் (JVP) 76 ஆண்டுகள் சாபக் காலம் எனக் கூறப்படும் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட விக்டோரியா, ரந்தெனிகல, ரன்தம்பே, சமனலவாவி, கொத்மலை நீர் தேக்கங்களாலேயே தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இந்த நன்மையை அனுபவிக்கிறது.

தேர்தல் மேடைகளில் 30 சதவீதமாக மின் கட்டணம் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்தார். ஆனால் அவ்வாறு 30 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு 3 ஆண்டுகள் செல்லும் என்று வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) குறிப்பிடுகின்றார்.

மின் கட்டண திருத்தம் குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வசந்த சமரசிங்கவுக்கு இல்லை என்பதை கூட அவர் அறியாமலிருக்கின்றார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது

மின் கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாத்திரமின்றி, சிறு மற்றும் பாரிய தொழிற்சாலைகளை நடத்துவோரும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் அவர்கள் மின் கட்டணத்தைப் பார்த்து பதறி ஓடுகின்றனர்.

எனவே மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...