மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஒரு கோரிக்கையினை முன் வைத்துள்ளார்.
தற்போது, டெங்கு நோய் வேகமாக பரவி வருவதால் அதிக அபாயமுள்ள பகுதிகளில் செயல்படும் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மேல் மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் சுமார் எழுபதாயிரம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடைந்த பின்னர் பாடசாலைகளையோ, பல்கலைக்கழகங்களையோ மூடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், தற்போது பல மருத்துவமனைகளில் நோயாளர்கள் அதிகமாக இருப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனங்களை மூடுவதற்கு கல்வி அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலம் கடந்த பிறகு மூடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.