தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் , “அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு, காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் கூறிய கருத்து வீதம் உண்மையானது.
தமிழ் எம்.பிக்களுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில்தான் அந்தத் தகவல்களை லண்டனில் ஜனாதிபதி கூறினார்.
ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக இதனை மறுக்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள். இது தமிழ் மக்களுக்கும் தெரியும்.” என பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் விஜயத்தில், கனடாவின் முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஸ்ரீபன் ஹூப்பரை சந்தித்த போது தமிழ் மக்களின் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தனர்.
மேலும், ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் பொய் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
1 Comment