நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, கடந்த பெப்ரவரி 02 மற்றும் 06 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சினால் 2474/18 மற்றும் 2474/19 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரண்டு அதி விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டன.
மட்டக்களப்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினர்:
ஏனைய மாகாணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள போதிலும், கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு இந்த வர்த்தமானியில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பல ஆண்டுகளாகத் தொழில் வாய்ப்பின்றிப் போராடி வரும் நிலையில், இந்த வர்த்தமானி அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும், உள்ளூர் பட்டதாரிகளை விடுத்து வெளிமாவட்டத்தவர்களை நியமிக்க அல்லது கிழக்கு மாகாணத்தவர்களைப் புறக்கணிக்க முயற்சிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
வெளியிடப்பட்ட வர்த்தமானியில் திருத்தங்களை மேற்கொண்டு, கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களில் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
நீண்டகாலமாகப் போராடி வரும் பட்டதாரிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் உடனடியாகப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க முன்வர வேண்டும்.
இவ்விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி தலையிட்டுத் தமக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீர்வை வழங்காவிட்டால், எதிர்வரும் நாட்களில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தொழில் கோரும் பட்டதாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.